Friday, November 19, 2010

மைனா - திரை விமர்சனம்

மைனா - திரை விமர்சனம் 

 


மைனா திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பே பயங்கரமான எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு, அதில் சிறந்த முறையில் பூர்த்தியும் ஏற்படுத்தியுள்ளது .


குடிப்பழக்கத்தின் காரணமாக குடித்து  குடித்து இறந்து போன தந்தையால் சிறு வயதாக இருக்கும் போதே வாழும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து வேறு வழியின்றி நடுத்தெருவில் நின்றிருக்கும் கதா நாயகிக்கும், அவருடைய அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுத்து உதவுகிறான் சிறுவயது ஹீரோ.

பனியாரம் சுட்டு விற்பனை செய்து வயிற்றை கழுவும் நயகியினுடைய அம்மாவால் கதாநாயகி மைனாவை படிக்க வைக்க முடியாத சூழ்நிலை. அதனால்  கூலி வேலையெல்லாம் செய்து மைனாவை எப்படியோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் கதா நாயகனுக்கு, இனம் புரியாத சிறு வயதில் இருந்தே கதா நாயகி மைனாவின் மீது காதல்! மைனவிட்கும் கதாநாயகன் மீது அதே ரக காதல்!

இது மைனாவின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரையிலும் வாய்திறந்து கதாநாயகனை மருமகனே.. மருமகனே... என்று அழைத்து வந்த அவர், அதன் பின்னர் அவர் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு கதாநாயகன் பண்ணும் ரீயாக்ஷனும், அதன் காரணமாக கிளம்பும் பிரச்னைகளும் தான் மைனா படத்தின் மீதிக்கதை!

க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த காதல் ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு ப்ளஸ் பாயிண்ட்.

மைனாவின் கதா நாயகராக சுருளி எனும் கதா பாத்திரத்தில் கலக்கி இருக்கும் தொட்டுப்பார் விதார்த் நம் இதயங்களை எல்லாம் தொடுகிறார். காட்டான் போன்று தலைமுடியும், தாடி மீசையுமாக பார்பதற்கு வில்லன் போல இருந்தாலும், ரசிகர்கள் இதயங்களை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு.

அதுவும் தன்னுடைய காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்றோரையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் மிகவும் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதே நேரத்தில் விபத்தில் மாட்டிக்கொள்ளும் பஸ்ஸில் தன்னையும், தன் மைனாவையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் போலிஸ் காரர்களையும் காப்பாற்றும் இடத்திலும் கைத்தட்டல் வாங்கி விடுகிறார் விதார்த்.

மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், (Amala paul )சிந்து சமவெளியில் விட்ட மீதியை இந்த படத்தில் பிடித்து விட்டார். இவர் அழகான தோற்றத்தால் மட்டுமல்ல .. சிறப்பான நடிப்பாலும் நம்மை தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.

விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும் தங்கள் பங்கை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவினுடைய மரணத்திற்கு காரணமாக இருக்கிற தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை தீர்த்துக்கட்டும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.

சுகுமாரின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் இதுவரை கண்டிராத தமிழ் சினிமாவை கண் முன் நிறுத்துகிறது. இப்படி இருக்குமோ க்ளைமாக்ஸ் அப்படி இருக்குமோ க்ளைமாக்ஸ். என்று எக்கச்சக்கமாக நம்மை யோசிக்க விட்டு, யாருமே எதிர்பார்க்காத கோணத்தில் மைனாவுக்கும், சுருளிக்கும் முடிவு கட்டியிருக்கும் க்ளைமாக்ஸில் டைரக்டர் பிரபு சாலமன் மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறார் என்றே கூறவேண்டும் .

0 comments:

Post a Comment